வியாழன், 29 ஜனவரி, 2015

கல்லூரி மாணவிகள் போராட்டம்-காவல்துறை அராஜகம்.

கடலூரில் இயங்கி வரும் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகள் பச்சையப்பன் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களை அரசே ஏற்கக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனையொட்டி செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரை 24 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 400 மாணவிகள் கலந்து கொண்டனர். இக்கல்லூரியின் பேராசிரியை பி.சாந்தி கடந்த நவம்பர் 2014-ம் ஆண்டு வேறு கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.அதனைக் கண்டித்தும், அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கோரியும், கல்லூரி முதல்வரை இடம் மாற்றம் செய்ய வேண்டியும் கல்லூரி மாணவிகள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் சின்டிகேட் உறுப்பினராக இருந்த பேராசிரியை பி.சாந்தி, கடந்த முறை பல்கலைக் கழக தேர்வுக் கட்டணத்தை உயர்த்திய போது மாணவர்களுக்கு ஆதரவாக போராடி தேர்வுக் கட்டணத்தை குறைத்துள்ளார். இதனால் இவரை திட்டமிட்டு இடமாற்றம் செய்து சின்டிகேட் உறுப்பினர் பதவியை பறித்துள்ளனர் என மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.கடந்த இரு மாதங்களாக உள்ளிருப்பு போராட்டங்கள், கோரிக்கை ஊர்வலம், உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம் பேச்சுவார்த்தை கூட நடத்தப்படவில்லை எனக் கூறி கல்லூரியில் மாணவிகள் 300 பேர் நேற்று வீட்டிற்கு செல்லாமல் கல்லூரியிலேயே அமர்ந்து 24 மணி நேர உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அரசோ, பல்கலைக்கழக நிர்வாகமோ பச்சையப்பன் அறக்கட்டளையோ தலையிடவில்லை. இதனை கண்டித்துதான் 24 மணி நேர போராட்டம் நடத்தினோம் என மாணவிகள் கூறினார்கள். கடலூர் சப்-கலெக்டர் ஷர்மிளா, டி.எஸ்.பி ராமமூர்த்தி ஆகியோர் போராட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக அரசிடம் தெரிவிப்பதாகவும் இரவு நேரம் என்பதால் மாணவிகள் அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்ல வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.ஆனால் அதனை ஏற்க மறுத்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். பெற்றோர்கள் சிலர் வந்து அழைத்தும் போராட்டத்தை விட்டு வர முடியாது என மாணவிகள் தெரிவித்தனர். இரவு முழுவதும் கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதன் கிழமை காலை 9 மணிக்கு மாணவிகள் தங்களின் 24 மணி நேர போராட்டத்தை முடித்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் 3 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.
 போலீஸ் நடவடிக்கை யினால் மாணவிகள் வருத்தம்:
 உள்ளிருப்பு போராட்டத்திற்கு பிறகு மாணவிகள் ரஷிதா, சுகன்யா, ஷர்மிளா, மஞ்சு உள்ளிட்டோர் கூறியதாவது:கல்லூரியில் வகுப்புகள் பாதிக்கப்படாமல் படித்துக்கொண்டே நாங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். இரண்டு மாதங்கள் போராட்டம் நடத்தியும் யாரும் எங்களை அழைத்து பேசவில்லை. மாறாக எங்களை மிரட்டுவதிலேயே குறியாக உள்ளனர்.நேற்று இரவு உணவை உள்ளே அனுமதிக்காமல் காவல்துறையினர் தடுத்ததால் மாணவிகள் பட்டினி கிடக்க நேரிட்டது. நள்ளிரவு 2 மணி அளவில் மாணவிகளின் பெயர் விலாசங்களை கேட்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்வோம் என காவல் துறை மிரட்டியது அதிர்ச்சி அளித்தது. மேலும் எங்களின் பெற்றோர்கள் கல்லூரிக்கு வந்த போது காவல்துறையினர் ஒருமையில் பேசினர், சிலரைத் தாக்கவும் செய்தனர். தொடர்ந்து நாங்கள் நீதிமன்றத்தின் மூலமாகவும் போராடத் திட்டமிட்டுள்ளோம். பிரச்சனையை மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் உள்ளோம் என்று தெரிவித்தனர்.கே.பாலகிருஷ்ணன் புகார்:கடலூர் கே.என்.சி கல்லூரியில் நள்ளிரவு நேரத்தில் மாணவிகளிடம் விசாரணை நடத்தி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சிதம்பரம் எம்.எல்.ஏ கே.பாலகிருஷ்ணன் கடலூர் மாவட்ட எஸ்.பி ராதிகாவிடம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். மேலும் துணை கண்காணிப்பாளரிடமும் பேசினார். அதனை அடுத்து போலீசார் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தினர்.காவல்துறையின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கே.சுனில்குமார், மாவட்ட செயலாளர் டி.அரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: