புதன், 31 ஆகஸ்ட், 2016

செப்.2: களம் காணும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்

இந்திய நாட்டின் தொலைத் தொடர்பு சேவைகளை அரசுத் துறையில் மட்டுமே வழங்கி வந்த சூழலில், இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்ட உலகமயக் கொள்கைகளின் காரணமாக தனியார் நிறுவனங்களும் தொலைத் தொடர்பு சேவைக்குள் நுழைந்தன.‘சமதளப் போட்டி’ என்று வாயளவில் கூறினாலும், தனியார்களுக்கு அப்போதிருந்தே பல்வேறு சலுகைகளை ஆட்சியாளர்கள் செய்து வந்தனர். தனியார் நிறுவனங்கள் மொபைல் சேவை வழங்கத் துவங்கி ஐந்தாண்டுகள் கழிந்த பின்னரே பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்க்கு 2002ஆம் ஆண்டுதான்சேவை வழங்க அனுமதிக்கப்பட்டது.
ஆனாலும்மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் காரணமாக பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வெகு வேகமாக வளர்ந்து வந்தது.பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் வரை நாம்அழைக்கும் அழைப்புகளுக்கான கட்டணம் நிமிடத்திற்கு 16 ரூபாய் வரையிலும், நம்மைஅழைப்பவர்களிடம் பேசினால் அதற்கு நிமிடத்திற்கு 8 ரூபாய் வரையிலும் கட்டணம் கட்ட வேண்டியிருந்தது.
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் சேவை தர ஆரம்பித்த போதே நம்மை அழைப்பவர்களிடம் பேசுவதற்கான கட்டணம் ஏதும் இல்லை என்று அறிவித்தது. தனியார் நிறுவனங்களும் அந்தக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. அதற்குமுந்தைய ஐந்து ஆண்டுகளில் இந்தக் கட்டணத்தில் மட்டும் இந்திய நாட்டு மொபைல் வாடிக்கையாளர்களிடம் இருந்து தனியார் கம்பெனிகள் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள்? அதுமட்டுமல்ல.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏர்டெல், ரிலையன்ஸ், வோடோபோன், ஐடியா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தங்கள் வருமானத்தில் 46,000 கோடிரூபாய்களை குறைத்துக்காட்டி அரசாங்கத்திற்கு தரவேண்டிய லைசென்ஸ் கட்டணத்தில் 12,600 கோடி ரூபாய்களை ஏமாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்துக்கு தடை
இந்திய மக்களின் ஆதரவோடு வேகமாக வளர்ந்து வந்த பிஎஸ்என்எல் நிறுவனம்குறைந்த கட்டணத்தில் சேவை கொடுத்த போதும் வருடத்திற்கு 10,000 கோடி வரை லாபத்தை சம்பாதித்தது. பிஎஸ்என்எல்-ன் வளர்ச்சிதனியார் கம்பெனிகளின் கொள்ளை லாபத்தைதடுத்த காரணத்தால் அரசாங்கம் அதனை தடை செய்ய முயற்சித்தது. தொலைத் தொடர்பு சந்தை பெருமளவில் விரிவடைந்து வந்தசூழ்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது விஸ்தரிப்பிற்காக 4.5 கோடி தொலைபேசி இணைப்புகளுக்கான டெண்டரை முடிக்க இருந்த சமயத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசாஅந்த டெண்டரை ரத்து செய்தார்.
அந்தடெண்டர் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஊழியர்களும் அதிகாரிகளும் இணைந்து11.07.2007ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்த போதும், கருவிகள் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு பின்னர் அறிவிக்கப்பட்ட 10 கோடி தொலைபேசி இணைப்புகளுக்கான டெண்டரும் ஆட்சியாளர்களால் ரத்து செய்யப்பட்டது. சந்தை விரிவடைந்துவந்த காலத்தில் இப்படி தொடர்ச்சியாக பிஎஸ்என்எல்-ன் வளர்ச்சியை ஆட்சியாளர்கள் முடக்கி, இந்திய தொலைத்தொடர்பு சந்தையின் பெரும் பகுதியை தனியார் கம்பெனிகள் கைவசப்படுத்த பேருதவி செய்தனர்.
பிஎஸ்என்எல்-ன் புத்தாக்கம் சங்கங்களின் புதிய முயற்சிகள்
இதன் காரணமாக 2009ஆம் ஆண்டு முதல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை விஸ்தரிக்கத் தொடங்கியது. மக்களின் சொத்தான இந்த பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்க ஆட்சியாளர்கள் தடை செய்த போதும் பிஎஸ்என்எல்ஐ புத்தாக்கம் செய்ய அந்நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்து பல முனைகளில் போராடியது. ஆட்சியாளர்களின் கொள்கையை எதிர்த்தபோராட்டங்கள், செயல் திறனற்ற நிர்வாகத்தினை செயல்பட வைப்பதற்கான போராட்டங்களுடன், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின்வேலைக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான இயக்கங்கள் என தொடர்ந்து செயல்பட்டது.இந்தக் கூட்டமைப்பு வாடிக்கையாளர் மகிழ்விப்பு வாரம், மாதம் மற்றும் வருடம் என்ற பெயரில் சேவையினை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது.

இதன் தொடர்ச்சியான முயற்சிகளின் காரணமாக நிர்வாகமும் ‘இரவு நேர இலவச அழைப்புகள்’ என்ற பெயரில்லேண்ட்லைன் தொலைபேசிகளில் இருந்து இரவு 9 மணிமுதல் காலை 7 மணி வரை அழைக்கும், அழைப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என்ற பொதுமக்கள் பயன் பெறும் நல்லதொரு திட்டத்தினை அறிவித்தது. அதேநேரத்தில் மாநிலங்களை விட்டுவெளியே செல்லும்போது மொபைல் தொலைபேசிகளுக்கு வரும் அழைப்புகளுக்கான கட்டணங்களையும் ரத்து செய்து இலவசம்என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்தது. கடந்த ஜனவரி மாதம் முதல் ‘புன்முறுவலுடன் சேவை’ என்ற பெயரில் ஊழியர்களும் அதிகாரிகளும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவதற்கான இயக்கங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

நிர்வாகத்தின் புதிய திட்டங்களாலும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கடினமான உழைப்பின் காரணமாகவும் இந்நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக 2013-14 ஆம் ஆண்டில் 691கோடி ரூபாய்செயல்பாட்டு நஷ்டத்தை சந்தித்த பிஎஸ்என்எல்2014-15ஆம் ஆண்டில் செயல்பாட்டு லாபமாக 672 கோடி ரூபாய்களை சம்பாதித்தது. இந்தசெயல்பாட்டு லாபம் 2015-16ல் 2,400 கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும் என நிர்வாகம் கூறுகிறது.கடந்த டிசம்பர் மாதம் சென்னை பெரு வெள்ளத்தின்போது தனியார் நிறுவனங்கள் எல்லாம் தனது சேவையை மூடிவிட்டு ஓடிச்சென்ற போதும், மக்களின் சொத்தான இந்தபிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் மக்களுக்காக அதிகப்படியான செலவுகளை செய்துசேவையை கொடுத்ததோடு ஒரு வார காலம் இலவசமாக அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இணையதளவசதி ஆகியவற்றை கொடுத்து இடர்பாடுகளின் போது மக்களின் உற்ற நண்பனாக செயல்பட்டது.
இயற்கைஇடர்பாட்டில் சிக்கிய மக்களுக்கு தொலைத்தொடர்பு சேவையை கொடுத்துக் கொண்டே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள உணவு, கம்பளி ஆடைகள் உள்ளிட்டவைகளை பிஎஸ்என்எல் ஊழியர்கள் வழங்கினார்கள். குப்பையாக கிடந்த சென்னையை சுத்தப்படுத்தவும் அதன் ஊழியர்கள் பணியாற்றினார்கள். தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வரும்இந்த மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தின் மீட்சிக்காக இதுவரை இருந்து வந்த /வரும் ஆட்சியாளர்கள் யாரும் எந்த ஒருபொருளாதார உதவியும் செய்யாத நிலையிலும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் முயற்சியால் இந்நிறுவனம் தற்போது லாபத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் 26.07.2016 அன்று ‘நலந்தானா’என்ற திட்டத்தின் அடிப்படையில் ஊழியர்களும் அதிகாரிகளும் மேளாக்களை நடத்திய போது தமிழகத்தில் ஒரே நாளில் 37,000க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ஊழியர்கள் அதிகாரிகளின் கூட்டமைப்பான ‘போரம்’ 10.08.2016 அன்று மக்கள்மத்தியில் பிஎஸ்என்எல்ன் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கோடு அனைத்து மாவட்ட தலைநகர்களின் பேரணியை நடத்தி அன்றைய தினமே மெகா மேளாக்களை நடத்தினார்கள். அன்றைய தினம் மட்டும் 68,000க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் தமிழகத்தில் விற்கப்பட்டது. நாடு முழுவதும் கடந்தவருடத்தில் இருந்து புதிய இணைப்புகளை கொடுப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனமே முதல் இடத்தில் தொடர்ந்து உள்ளது.
வெந்நீர் ஊற்றும் மத்தியஅரசாங்கம்
இவ்வாறாக இந்திய நாட்டு மக்களின் ஆதரவோடும், பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கடுமையான உழைப்பின் காரணமாகவும் முன்னேறி வருவதைக்கண்ட ஆட்சியாளர்கள் இந்நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயல்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் நாட்டில் உள்ள வளங்களை, அனைத்து பகுதி மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கோடு உருவாக்கப்பட்ட திட்டக் கமிஷனை தற்போதைய ஆட்சியாளர்கள் கலைத்து நிதி ஆயோக்என்ற அமைப்பினை உருவாக்கி உள்ளனர். அந்தநிறுவனம் தற்போது பிஎஸ்என்எல் ஐகேந்திர பங்கு விற்பனை என்ற பெயரில்தனியார்களுக்கு நேரடியாக தாரை வார்க்கும்ஆலோசனைகளை முன்மொழிந்து உள்ளது. இதனை எதிர்த்து ஊழியர்களும், அதிகாரிகளும் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
‘பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் செயல்படாத தன்மை காரணமாக பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைகிறது. எனவே தனியார்மயமாக்குகின்றோம்’ என்று ஆட்சியாளர்கள் சொல்லி வந்தார்கள். அவர்களின் சதித்திட்டங்களை எல்லாம் தகர்த்தெறிந்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கடுமையான உழைப்பின் காரணமாக மீண்டு வரும்பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் தனியார்மயமாக்க ஆட்சியாளர்கள் நினைக்கின்றார்கள் எனில் அவர்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான கொள்கைகள் தானே தவிர இந்திய நாட்டு மக்களுக்கான கொள்கைகள் அல்ல என்பதை நிரூபணம் செய்கிறது.
எனவே தான் விலைவாசியை கட்டுப்படுத்து, வேலைவாய்ப்பை உருவாக்கு, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சகூலியாக மத்திய அரசின் ஊதியக் குழு பரிந்துரைத்த 18,000 ரூபாயை வழங்கிடு, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்காதே என்பது உள்ளிட்ட 12 அம்சக்கோரிக்கைகளோடு செப்டம்பர் 2ல் போராட்ட களம் காணும் இந்திய நாட்டு உழைப்பாளி மக்களுடன் இணைந்து போராடுவது என பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும் இன்னபிற சங்கங்களும் முடிவெடுத்துள்ளனர். மீண்டுமொரு சுதந்திர போராய் நடக்கும் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தில் அனைத்து பிஎஸ்என்எல் ஊழியர்களும் பங்கெடுத்து இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்குவது உறுதி.
கட்டுரையாளர்: தோழர்  A. பாபு ராதாகிருஷ்ணன் மாநிலச் செயலாளர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016


25.08.216 அன்று மாலை செஞ்சியில் நடைபெற்ற BSNLEU-NFTE இணைந்த செப்டம்பர் 2 வேலைநிறுத்த கோரிக்கை விளக்க சிறப்புக்கூட்டம்







25.08.216 அன்று மதியம் திண்டிவனத்தில் நடைபெற்ற BSNLEU-NFTE இணைந்த செப்டம்பர் 2 வேலைநிறுத்த கோரிக்கை விளக்க சிறப்புக்கூட்டம்








25.08.216 அன்று காலை விழுப்புரத்தில் நடைபெற்ற BSNLEU-NFTE இணைந்த செப்டம்பர் 2 வேலைநிறுத்த கோரிக்கை விளக்க சிறப்புக்கூட்டம்