திங்கள், 31 மார்ச், 2014

அன்பார்ந்த தோழர்களே...

             கடலூர் மாவட்டத்தின் ஒன்றுபட்ட NFTE இயக்கத்தின் மூன்றாம் பிரிவு (E3) மாவட்டச் செயலராக பணியாற்றிய தோழர். P. பிச்சை பிள்ளை S.T.S. அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

             அவர்தம் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் , NFTE இயக்கத் தோழர்களுக்கும், நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

குறிப்பு : அவரது இறுதி சடங்கு நாளை (01.04.2014) வில்வ நகர், BSNL ஊழியர் குடியிருப்பில் நடைபெரும்.  

செவ்வாய், 25 மார்ச், 2014

ஐந்து லட்சம் கோடிக் கடனும், ஆறுச்சாமியின் குடிசை வீடும்

பிரபலமான தேசிய வங்கியின் மூத்தவழக்கறிஞரிடம் இருந்து அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. பழனிவட்டம், நெய்காரப்பட்டி கிராமம், அக்கமநாயக் கன்புதூர், மேற்குத்தெரு, கதவு எண் 12ல்குடியிருக்கும், மாரியப்பன் மகன் ஆறுச் சாமி என்பவரை, 1 லக்கமிட்டவராக காட்டியும், அவரது மகள் ராஜாத்தியை 2 லக்கமிட்டவராகவும் காட்டி நோட்டீஸ் அனுப்பப்பட் டிருந்தது.நெய்காரபட்டி கிளை போஸ்டாபீஸி லிருந்து மேற்குநோக்கி கொழுமம் மெயின் ரோட்டில் அந்த வயதான போஸ்ட்மேன் பய ணித்தார். அவர் பயணித்த சைக்கிளும் அவரது வயதையொத்தது என்பதால் ஒருவித கிரீச் ஒலியை வலிதாளமுடியாமல் விட்டுவிட்டு வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
அது போஸ்ட்மேனின் வலியையும் சேர்த்து உணர்த்துவதாக இருந்தது. கொளுத்தும் வெயிலும், தார் ரோடும் எளிய மனிதர்களை வறுத்தெடுப்பதற்கு இணக்கமாக இருந்தது. மெயின்ரோட்டிலிருந்து தெற்குப் பக்கம் பிரிந்து உள்ளே செல்லும் மெட்டல் ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்த பிறகு அக்கமநாயக்கன்புதூர், தட்டோட்டுக் கூரையுடன் கூடிய காரை உதிர்ந்த செம்மண் சுவர் வீடு களுடன் பரிதாபமாக வரவேற்றது. ஊருக்கு கடைசியில் உள்ள மேற்குத் தெருவைச் சென்று அடைவதற்குள் போஸ்ட்மேனுக்கு நாக்கு தள்ளிவிட்டது.போஸ்ட்மேனிடம் கைநாட்டுப் போட்டு, தபாலை பெற்றுக் கொண்ட ஆறுச்சாமி அதை அதிசயப் பொருளை பார்ப்பது போல முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டிருந்தார்.
படிக்கத் தெரிந்த மகள் ராஜாத்தி வேலை தேடி பக்கத்து நகருக்குப் போயிருந்தாள். போஸ்ட் மேனைப் படிக்கச் சொல்லி கேட்கலாம் என நினைத்தபொழுது, போஸ்ட்மேன் மேற்குத் தெருவை கடந்து சென்றுவிட்டார் என்பதை அவரது சைக்கிள் கிரீச் ஒலி மூலம் சேதி சொன்னது.ஊர்ச்சாவடியில் ஒருவாரத் தாடியைச் சொறிந்து கொண்டு இருந்த ஓய்வுபெற்ற வாத் தியார் சண்முகம், கவரைப் பக்குவமாய் பிரித்து உள்ளே இருந்த நோட்டீஸைப் பதனமாக வெளியில் எடுத்தார். கொஞ்ச நேரம் பொழுது போவதற்கு ஒரு ஆள் கிடைத்தான் என்ற சந்தோஷத்தில் அகமகிழ்ந்த சண்முகம் வாத்தியார், ஆறுச்சாமியை அருகே உட்காரச் சொல்லி பணித்தார். அதற்குப் பிறகு வாத் தியார் சாவதானமாக ராகமிழுத்துப் படித்த நோட்டிஸ் விபரம் பின்வருமாறு:
தாங்கள் எமது கட்சிக்காரர் வங்கியிடம் இருவரும் சேர்ந்து கல்விக்கடன் கேட்டு மனுச்செய்ததில் (இந்த இடத்தில் வாத்தியார் வாசிப்பதை நிறுத்தி “ஒம்பொண்ணோட சேந்து நீயுமா படிக்க கடன் வாங்குன?” என கேட்டார். அதற்கு பதற்றத்துடன் இருந்த ஆறுச்சாமி ஆமாம் என்றும், இல்லை என்றும் மேலும் கீழுமாகவும், பக்கவாட் டிலும் தலையை வேகமாக ஆட்டி தீட்சண்ய மாக பதில் அளித்ததில் வாத்தியார் பயந்து போனார்) மேற்படி மனுவும் கடன் எண் 2325ல் அங்கீகாரம் பெற்று தாங்கள் 07.12.06ம் தேதியில் கடன் தொகையாக ரூ.1,10,000/ம் பெற்றுக்கொண்டு அதற்கு ஆதரவாக கொதுவை ஒப்பந்தமும் கடன் பத்திரங்களும் வேறு சில ஆதரவுகளும் வங்கிக்கு எழுதிக் கொடுத்துள்ளீர். மேற்படி கடனுக்கு 12 சதவீதம் வட்டி செலுத்தவும் ஒப்புக் கொண் டுள்ளீர். மேற்படி கடன்தொகையை உரிய கெடுவிற்குள் செலுத்துவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளீர்.
மேற்படி கடன் தொகையை அடைந்து கொண்டு வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகைகளை சரிவர செலுத்தாமல் இருந்து வருகிறீர்கள். அதனால் உமது கணக்கை ஆதாயம் தராத கணக்கு என்றும், ஒழுங்கற்ற கணக்கு என்றும் கருத்தில் கொள்ளப்பட்டது. சரியான முறையிலும், ஒழுங்கான முறையிலும் வைத்திருக்கும் வங்கியின் கணக்குப்படி 31.09.2013ம் தேதி வரை தாங்கள், ரூ.2,13,196ஐ செலுத்த வேண்டியுள்ளது. தாங்கள் இருவரும் சேர்ந்து மேற்படி கடன் தொகையை செலுத்த வேண்டும். ஒப்புக் கொண்டபடி தவணைத் தொகைகளை வங்கிக்கு செலுத்தவில்லை. கல்விக்கடனின் பயனை அடைந்து கொண்டு அதனைத் திருப்பி வங்கிக்கு செலுத்தாமல் இருப்பது சரியல்ல. 1.10.2013 முதல் பின்வட்டியும், பின் செலவும் செலுத்த வேண்டும்.ஆகையால், இந்த அறிவிப்பு பார்த்தஒருவார காலத்திற்குள் மேற்படி பாக்கித் தொகை ரூ.2,13,196ம் வட்டியும், 1.10.2013 முதல்பின்வட்டியும் இந்த அறிவிப்புச் செலவு ரூ.600ம் சேர்த்து வங்கியில் செலுத்தி, தக்கரசீது பெற்றுக் கொள்ள வேண்டியது.
தவறினால் தங்கள் மீது சட்டப்பூர்வமான கோர்ட்நடவடிக்கை எடுத்து உடன் ஜப்தி, வாரண்டு போன்ற உத்தரவுகள் பெறப்படும் என்றும், அதனால் எமது கட்சிக்காரர் வங்கிக்கு ஏற்படும் அனைத்து செலவு நஷ்டங் களுக்கும் தாங்களே பொறுப்பு என்றும் இதன் மூலம் கண்டிப்பாக அறிவிக்கலாயிற்று - வழக்கறிஞர்.அடுத்த நாள் காலை 11 மணியளவில் ஆறுச்சாமியும், மகள் ராஜாத்தியும் வங்கி மேலாளரின் முன்பு நின்று இருந்தனர். குளிரூட்டப்பட்ட சொகுசு அறையின் சுழல் நாற்காலியில் ஜாக்சன் துறையைப் போலமேலாளர் வீற்றிருந்தார். ஆனால், ஆறுச்சாமி கட்டபொம்மனைப் போல இல்லாமல், நடுங்கும் கைகளை மறைக்கப் படாத பாடுபட்டுக் கொண்டிருந்தார். இறுதியாக மேலாளர், “படிக்க வாங்கின கடனை வட்டியோட சேத்துக் கட்டலைன்னா இருக் குற குடிசை வீட்ட ஏலத்துக்கு கொண்டு வந்துடுவோம், வாரண்டுல ஒன்னையும் கைதுபண்ணி உள்ள வச்சிடுவோம்“ என மிரட்டி னார்.
கதிகலங்கிப் போன ஆறுச்சாமியைக் கைத்தாங்கலாய் ராஜாத்தி அழைத்து வந்தாள். வங்கியின் வாசலில் வைத்திருந்த தட்டியில், ஆறுச்சாமி மற்றும் ராஜாத்தியின் புகைப்படங்கள் கடன் செலுத்தாதவர்கள் வரிசையில் ஒட்டப்பட்டிருந்தது. அதை ஆறுச்சாமியின் கண்களில் படாமல் ராஜாத்தி அழைத்துச் சென்ற பொழுது அவமானத்தால், அவள் பாதம்பட்ட பூமி நலுவுவது போலிருந்தது.மறுநாள் காலை செய்தித்தாளில் இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், டிசம்பரில் நடத்த இருக்கும் ஒரு நாள் வேலை நிறுத்தம் குறித்த செய்தி வந்திருந்தது. மேற்படி செய்தியின் சுருக்கம் பின்வருமாறு:தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து வசூலிக்க வேண்டிய வாராக்கடன் கடந்த மார்ச் கணக் குப்படி ரூ.1,64,461/- கோடிகளாகவும், 2007-2013க்கு இடைப்பட்ட காலத்தில் வாராக்கடன் ரூ.5லட்சம் கோடிகளாகவும் அதிகரித் துள்ள நிலையில், கடன் வசூலுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மன்மோகன் சிங் தலைமையில் ஆளும் மத்திய அரசு மேலும், மேலும் கடன் தள்ளுபடி செய்வதை கண்டித்து ஒரு நாள் வேலைநிறுத்தம் நடை பெறுகிறது.
ஊர்ச்சாவடித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு உரக்க செய்தியைப் படித்த சண்முகம் வாத்தியாரை, அடுத்த பக்கத்தில் வந்திருந்த மற்றொரு செய்தி மௌனமாக சிந்திக்க வைத்தது. அது வேறொன்றும் இல்லை, ஒரு வருடத்தில் இந்திய வங்கிகள் 1,20,000 மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்கடனின் மதிப்பு வெறும் ரூ.900/- கோடி, ஆனால், வங்கிகள் மாணவர்கள் கல்விக்கடன் கட்டத் தவணை தவறினால், கைது, ஜப்தி, திருட்டுக் குற்றவாளிகளின் போட்டோவைப் போட்டு காவல்நிலைய தட்டி போர்டு வைப்பது போல மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் போட்டோ போட்டு வங்கி வாசலில் டிஜிட்டல் போர்டு வைப்பது போன்ற கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறதாம்.
செய்தித்தாளில் முகம் புதைத்திருந்த சண்முகம் வாத்தியார் வெகுநேரம் கழித்தே எதிரில் நிற்கும் ஆறுச்சாமியைக் கவனித்தார். ஆறுச்சாமியின் வலதுபக்க கை கக்கத்தில் மஞ்சள் பை இருந்தது. “பேங்குல என்னப்பா சொன்னாங்க?” என வாத்தியார் கேட்டார். அதற்கு ஆறுச்சாமி “அதெல்லாம் கெடக்கட்டுங்கய்யா, முப்பாட்டன் காலத்துல இருந்து இருக்கற ஒத்தவீடு அதவித்துக் கடனை அடைக்க ஒரு வழி சொல்லுங்கய்யா” என கக்கத்தில் இருந்து மஞ்சள் பையை பவ்யமாக எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த பொழுது மஞ்சள் பைக்குள் மனைவரித் தோராய பட்டாவும், ஊராட்சிக்கு செலுத்திய சில வீட்டுவரி ரசீதுகளும் இருந்தன.
ஆறுச்சாமியை வினோதமாகப் பார்த்த வாத்தியாரிடம், “மனுசனுக்கு மானம் தான் பெரிசுங்க வாத்தியாரய்யா, நானு, எங்கப்பன், பாட்டன், முப்பாட்டன்னு நாங்க யாருமே படிச்சது இல்லய்யா, ஆனா ஒண்ட ஒரு குடிசை இருந்துச்சு, அரசாங்கம் சொல்லுச்சுன்னு பேங்குல கடன் வாங்கி எம்புள்ளைய படிக்க வச்சது தான் இப்ப குத்தமாப் போச்சு, இருந்த ஒரு குடிசையும் இப்ப கையவிட்டுப் போகுது. கடன் கட்டலைன்னா கைது பண்ணி உள்ள வச்சுருவாங்களாம் அதுக்கப்பறம் இந்த உசுர வச்சுகிட்டு இருக்கிறதுல அர்த்தம் இல்லங்கய்யா ஆன ஒன்னுங்கய்யா, இனி சென்ம சென்மத்துக்கும் மழைக்குக் கூட என் வகையறாப் புள்ளைங்க பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதுய்யா” என ஆறுச்சாமி தீர்மானகரமாகச் சொன்னான். அந்த எளிய மனிதனின் குரலை எங்கே போய்ச் சொல்லுவது என சண்முகம் வாத்தியார் திகைப்பில் ஆழ்ந்து போனார்.
வரத.இராஜமாணிக்கம் நன்றி தீக்கதிர் 

மாற்று அவசியம்... மாற்றம் நிச்சயம்

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (டீநுஊனு) கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு மத்தியிலான ஏற்றத்தாழ்வு இருமடங்காக உயர்ந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மோடி தனது தேர்தல் பிரச்சாரங்களில் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வது பற்றி நியை பேசிகிறார்; 1948லிருந்து 2008ம் ஆண்டு வரை வாஜ்பாய் பிரதமராக இருந்த “ஒளிரும் இந்தியா” உட்பட 462 பில்லியன் டாலர் (சுமார் 25லட்சம் கோடி ரூபாய்) இந்தியாவிலிருந்து கணக்கில் வராத கறுப்புப் பணமாக வெளியேறியுள்ளதாக “உலக நிதிநேர்மை” (ழுடடியெட குiயேnஉடைய iவேநபசயடவைல) என்ற அமைப்பு அறிவித்திருக்கிறது. மோடி வசதியாக இதை மறந்துவிடுகிறார்.இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10சதவீதம் 55 கோடீஸ்வரர்களிடம் உள்ளது என்பதை ராகுலும் அறிவார், மோடியும் அறிவார்.

இந்த கோடீஸ்வரர்கள் அரசு அதிகாரத்தில் உயரிய இடத்தில் உள்ளனர். அம்பானியுடன் மோதி மணிசங்கர ஐயரும், ஜெய்பால் ரெட்டியும் பந்தாடப்பட்டனர். வீரப்பமொய்லி கொஞ்சம் அனுசரித்துப் போவதாக செய்திகள் உண்டு. குமாரமங்கலம் பிர்லா மீது வழக்குப்பதிவு என்றவுடன் காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மாவைப் போல் பாஜகவின் அருண்ஜெட்லியும் துடித்துப் போனார். இது வர்க்கப் பாசம்தான்.எவ்விதமான உரிமைகளுமின்றி, அதிகாரங்களுமின்றி இந்தியாவில் 77 சதவிகித மக்கள் ரூ.20க்கும் கீழே வருமானம் பெற்று வாழ்கின்றனர். நுகர்வு அடிப்படையில் ஏற்றத்தாழ்வினை வெளிக்கொணரும் விவரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி 2000ம் ஆண்டில் நகர்ப்புறத்தில் பணக்காரர்களின் நுகர்வு ஏழைகளின் நுகர்வை காட்டிலும் 12 மடங்கு அதிகமாக இருந்தது. 2012ல் இது 15 மடங்காக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் இதே காலகட்டத்தில் 7 மடங்காக இருந்தது. 9 மடங்காக உயர்ந்துள்ளது.

அந்த 12 ஆண்டுகளில் புதிய தாராளமய செயல்பாட்டில் ஏற்றத்தாழ்வு இடைவெளி விரிவடைந்ததே தவிர குறையவில்லை.மோடியின் தேநீர் கடை வீடியோ முகமும், ராகுலின் ரயில்வே சுமை கூலிகள் சந்திப்பும், இந்த ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி இவர்கள் கவலைப்பட்டதாக காண்பிக்கவில்லை. மாறாக இருவருமே பெர்னார்ட்ஷா கூறிய வண்ண வண்ண பலூன்களைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமது சிந்தனை களவாடப் படாமல் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும். தேர்தல் களத்தில் தெளிவுடன் செயல்பட வேண்டிய தேவை உள்ளது.

“மாற்று அவசியம். மாற்றம் நிச்சயம்” என்ற காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட வெளியீட்டில் தோழர் ஆர்.கோவிந்தராஜன் எழுதியதிலிருந்து

தோழர்களே ! மாற்று அவசியம்... மாற்றம் நிச்சயம்


சிதம்பரத்தில் நடைபெற்ற RGB தேர்தல் பிரச்சாரகூட்டம்

சிதம்பரம்,கட்டுமன்னார்கோயில் பகுதிகளில் கூட்டணி சங்க தலைவர்களுடன் வேட்பாளர் அறிமுக தேர்தல் பிரச்சாரகூட்டம் நடைபெற்றது.60 க்கும் மேற்பட்ட அனைத்து சங்க தோழர்களும்,தோழியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






கண்டன ஆர்ப்பாட்டக் காட்சிகள்

NLC ஒப்பந்த ஊழியர் மத்திய பாதுகாப்பு படை வீரரால் சுட்டுகொல்லபட்டதை கண்டித்து இணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டம் முழுவதும்  நடைபெற்றது. அனைத்து சங்கங்களை சார்ந்த  தோழர்கள் கலந்து கொண்டனர் .

கடலூர் மாவட்ட அலுவலகம் முன்பு 















திண்டிவனம்  தொலைபேசி நிலையம் முன்பு 




செஞ்சி   தொலைபேசி நிலையம் முன்பு 



சிதம்பரம் தொலைபேசி நிலையம் முன்பு 

செவ்வாய், 18 மார்ச், 2014

NLC ஒப்பந்த தொழிலாளி படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

 அன்பார்ந்த தோழர்களே !
நமது கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள NLC பொதுத்துறை நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில் அப்பாவி ஒப்பந்தத்தொழிலாளி தோழர் ராஜ்குமார் மூளை சிதறி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.அதனைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து அதிகாரிகள் சங்கம் மற்றும் அனைத்து ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் நடைபெற உள்ளது.நமது தோழர்கள் முழுமையாக அனைத்து கிளைகளிலும்  பங்கேற்று வெற்றிபெரச் செய்யுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

NLC ஒப்பந்த தொழிலாளி படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மாநிலச்சங்க அறைகூவல் <<<click here>>>

வியாழன், 13 மார்ச், 2014

கூட்டு நடவடிக்கைக் குழு உதயம் [JAC]


BSNL-ல் உள்ள ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு உதயம் மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

சனி, 8 மார்ச், 2014

பெண்கள் உரிமை போற்றுவோம்

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படும் சர்வதேச மகளிர் தினம் உருவானதே ஒரு போராட்டக் களத்தில்தான். 1900ஆம் ஆண்டின் முதல் 10 ஆண்டுகளில் பெண்கள் பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இவற் றிற்கு எதிராக உலகம் முழுவதும் பெண்கள் வெகுண்டெழுந்து போராடிக்கொண்டிருந் தனர். சில நாடுகளில் பெண்களுக்கான அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.
சர்வதேச மகளிர் தினம் தோற்றம்
1907-ல் ஜெர்மனியில், ஸ்டட்கார்ட் என்ற நகரில் முதன் முதலாக ‘சோசலிச பெண்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 15 நாடுகளிலிருந்து 59 பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். உலகம் முழுவதுமுள்ள பெண்கள் அமைப்புகளை ஒருங்கிணைப்ப தற்கு ஒரு சர்வதேச பெண்கள் அமைப்பு இம்மாநாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு கிளாரா ஜெட்கின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 
1908-ம் ஆண்டு முதன்முதலில் நியூ யார்க் நகரில், 15000-க்கும் மேற்பட்ட பெண் கள் பேரணியாக சென்று தங்களின் வேலை நேரத்தை குறைக்க வலியுறுத்தியும், தேர் தலில் வாக்களிப்பதற்கான உரிமை கோரி யும், தங்களுக்கு நியாயமான, சமவேலைக்கு சமஊதியம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். 
1909-ல் ஆடை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த மகளிர் தங்களுக்கு நியாய மான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத் தம் மேற்கொண்டனர். அமெரிக்காவின் சோச லிஸ்ட் கட்சி தேசிய அளவிலான முதல் மகளிர் மாநாட்டை பிப்ரவரி 28-ம் தேதி நடத் தியது. அன்றைய தினத்திலிருந்து 1913 வரை பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது. 
ஜெர்மனியில், 1910-ல் கோபன்ஹேகன் நகரில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சி இரண்டாவது மகளிர் மாநாட்டை நடத் தியது. இதில் 17 நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இவர்கள் பல்வேறு நாடுகளின் தொழிற்சங் கங்களின் பிரதிநிதிகளாகவும், சோசலிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளாகவும், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் இருந்த னர். பின்லாந்து நாட்டின் நாடாளுமன்றத் திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதிநிதிகளாக வந்திருந் தனர். இந்த மாநாட்டில் சோசலிஸ்ட் ஜனநா யக கட்சியின் மகளிர் பிரிவு தலைவராக இருந்த கிளாரா ஜெட்கின், பெண்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தை நடத் திட வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார். இந்த தீர்மானம் அனைத்து பிரதி நிதிகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 
ரொட்டியும் ரோசாப்பூவும் 
தொடர்ந்து 1911-ல் சர்வதேச மகளிர் தினம் முதன்முதலாக ஆஸ்திரியா, டென் மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடு களில் மார்ச் மாதம் 19-ந்தேதி கொண்டாடப் பட்டது. இந்த நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட பேரணி கள் நடைபெற்றன. இந்த பேரணிகளில் பெண்கள் வேலை செய்வதற்கான உரிமை. தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமை, பயிற்சி பெறுவது, பொது அலுவலகங்களில் வேலை செய்வது, சமூகத்தில் பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன. 
அதே ஆண்டில் மார்ச் மாதம் 25-ந்தேதி அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு முக்கோண தீ விபத்தில், பணியில் ஈடுபட் டிருந்த 140 பெண்கள் உயிரிழந்தனர். இவர் களில் பெரும்பாலானோர் இத்தாலி நாட் டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து அன் றைய தினம் அமெரிக்க நாட்டில் பெண்க ளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்ததை வெளிப்படுத்தியது. இதன் பின்னர், தொழி லாளர் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட இந்த நிகழ்ச்சி அடிகோலாக அமைந்தது. இதே ஆண்டில் பெண்கள் நடத்திய ‘ரொட்டியும் ரோசாப்பூவும்’ என்ற இயக்கம் பெண்களின் கோரிக்கை களை வலியுறுத்துவதாக அமைந்தது. இத்த கைய தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை யும் வேலை செய்யும் உரிமையும் சம ஊதியம் பெறும் உரிமையும் பிற்காலத்தில் கிடைத்தன. 
மார்ச் 8 
சர்வதேச பெண்கள் தினம் 
1913-14-ல் ரஷ்ய நாட்டில் முதன் முறை யாக சர்வதேச பெண்கள் தினம் கொண் டாடப் பட்டது. 1913-ம் ஆண்டு பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று நடைபெற்ற மாநாட்டில் மார்ச் 8 பெண்கள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 1914-ல் போருக்கு எதிராக பெண்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பேரணி நடத்தினர். 1917-ல் ரஷ்ய பெண்கள் ‘ரொட்டிக்காகவும் போருக்கு எதிராகவும்’ பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது நடைபெற்ற போரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த வேலை நிறுத்தத்தை தடைசெய்ய ஆரம்பத் தில் அரசு முயற்சி செய்தபோதும் பின்னர் ரஷ்ய நாட்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதல் முறையாக தந்தது குறிப் பிடத்தக்கது. அந்த வீரஞ்செறிந்த வேலை நிறுத்தம் ரஷ்ய ஜூலியன் காலண்டர் படி பிப்ரவரி 23 என்றாலும் உலகம் முழுவதும் கடைப்பிடித்து வரும் காலண்டர் படி மார்ச் 8 ஆகும். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளே நாம் இன்று கொண்டாடும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாகும். 
இன்று சர்வதேச மகளிர் தினம் உலகில் அனைத்து நாடுகளிலும் உற்சாகமாக கொண் டாடப்படுகிறது. சீனா, வியட்நாம், ஒன்றுபட்ட ரஷ்ய நாடுகளில் இன்று மகளிர் தினத்திற்கு அரசு விடுமுறை விடப்படுகிறது. அமெரிக் காவில் மார்ச் மாதம் முழுவதும் பெண்கள் வரலாற்று மாதம் (றுடிஅநn’ள ழளைவடிசல அடிவோ) கொண்டாடப்படுகிறது. 
இந்திய நாட்டில் பெண்கள் நிலை 
நமது நாட்டிலும் மகளிர் தின கொண் டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வணிக நிறுவனங்கள் இந்த நாளை பயன் படுத்திக்கொண்டு ஆடை அணிகலன்கள் விற்பனைக்கு, விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இந்திய நாட்டில் பெண்கள் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. 
இந்திய நாட்டில் பணிபுரியும் பெண் களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக ‘அசோசெம்’ அமைப்பு சேகரித்த புள்ளி விப ரங்கள் கூறுகின்றன. இரவு நேரங்களில், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற் றும் பெண்களும், விமானப் போக்குவரத்துப் பணியில் பணியாற்றும் பெண்களும், மருத்து வமனையில் பணியாற்றும் பெண்களும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்றும், நிறுவனங்கள் இவர்களுக்கு போதுமான பாதுகாப்பை தரத்தவறியுள்ளன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது தலைநகர் தில்லியில் அதிகபட்சமாக 65சதவீதமும் ஹைதராபாத்தில் 28சதவீதமும் மும்பையில் 28சதவீதமும் என உள்ளது. 
பெங்களூரில் உள்ள 2200 தொழில் நிறுவனங்களில் 1600 நிறுவனங்கள் மட்டும் தொழில்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் 75000 முதல் 95000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மருத் துவமனைகள், விமானப்போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணி யாற்றும் இவர்களில் 56சதவீத பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என ‘அசோசெம்’ புள்ளிவிபரம் கூறுகிறது. 
மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, தந்தை பெரியார் போன்றவர்கள் பெண் களுக்கு சம உரிமை வழங்குவது குறித்து பேசியிருந்தாலும், பெண்களுக்கென தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அவை யெல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளன. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு பிரச்சனையில் இன்று இந்திய அரசியல்வாதிகளின் முகமூடிகள் கிழித்தெறி யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சித் தலைவர்களை தவிர ஏனையோர் இரட்டை நிலைப்பாடு கொண்டி ருப்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. மாநி லங்களவையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு மசோதா, மக்களவையில் நிறை வேற்ற முடியாமல் உள்ளது வெட்கக்கேடானது. 
இன்று பெண்கள் தினத்தை கொண்டாடு வதில் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது. அதே போல் உழைப்பாளி மக்களுக் கும் ஒரு நோக்கம் உள்ளது. பெண்களுக்கு, சமூகம், அரசியல், பொரு ளாதாரம் மற்றும் தொழிற்சங்கத்தில் சமத்து வம் கிடைத்திடவும், சொத்து உரிமை, சட்டம் இயற்றக் கூடிய அவைகளில் இடம் பெற்றிடவும், வேலை செய்யுமிடங்களில் ஆண்- பெண் என்ற பாகுபாடு இல்லாமலிருக்கவும், வேலை செய்யுமிடங்களில் பாதுகாப் பினை உத்தரவாதப்படுத்திடவும், குழந்தைகள் காப்பகங்கள் ஏற்படுத்திடவும், பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்திடவும், வரதட்சணைக் கொடுமைகளை களைந்திட வும், பெண்களை வணிக விளம்பரத்திற்கு அருவருக்கத்தக்க முறையில் பயன்படுத் துவதை தடுத்து நிறுத்திடவும், சாதியக் கொடுமைகளிலிருந்தும், மதரீதியான, சம்பிர தாய, மூட பழக்க வழக்கங்களிலிருந்தும் பெண்களை மீட்டெடுத்திடவும், உலகமயத் தினால் முதலில் பாதிக்கப்படுவது பெண் என் பதால் அவற்றிற்கு எதிரான போராட்டங்களில் பெண்களை ஈடுபடுத்துவதும் இன்று உழைப்பாளி மக்கள் முன் உள்ள தலையாயக் கடமைகளாகும். இந்த உணர் வோடு 101-வது சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவோம்
நன்றி தீக்கதிர் - 8-03-11

கடலூர் மாவட்டசங்கக்தின் சார்பில் சர்வதேச மகளிர்தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக்கொள்கிறோம்


செவ்வாய், 4 மார்ச், 2014

திருக்கோயிலூர் கிளைமாநாடு

அன்பார்ந்த தோழர்களே !
ஒத்திவைக்கப்பட்ட நமது திருக்கோயிலூர் கிளைமாநாடு 05.03.2014 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும்.அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திங்கள், 3 மார்ச், 2014

விருதுநகர் மாவட்ட மாநாடு வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

அன்பார்ந்த தோழர்களே !
விருதுநகர் மாவட்ட சங்கத்தின் 7 வது மாவட்ட மாநாடுஎதிர்வரும்5,6தேதிகளில் ருப்புக்கோட்டையில்நடைபெறவுள்ளது.அம்மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெற மனதார வாழ்துகிறோம்.

சனி, 1 மார்ச், 2014

சென்னை சொசைட்டி -RGB தேர்தல் நமது கூட்டணி வேட்பாளர்கள்

அன்பார்ந்த தோழர்களே !

  மார்ச் மாதம் நடைபெறவுள்ள சென்னை சொசைட்டி தேர்தலில் கடலூர் மாவட்டத்திற்கான 9 RGB இடங்களுக்கு  BSNLEU, NFTE, SNEA(i), AIBSNLEA ஆகிய சங்கங்கள் இணைந்து போட்டியிட உள்ளன. வேட்பாளர்கள் விபரம் 
வரிசை எண்      வேட்பாளர் பெயர்  

         3                       A அண்ணாமலை SSS கடலூர் 

         4                       I  துரைசாமி TM திண்டிவனம் 

         5                       V  இளங்கோவன் TTA அரகண்டநல்லூர் 

         7                       V  கிருஷ்ணமூர்த்தி TM சிதம்பரம் 

         8                       P குமார் TM கடலூர் 

       10                        S நடராஜன் SDE திண்டிவனம் 

       12                        C பாண்டுரங்கன் SDE கடலூர் 

       14                       P சங்கரன் TM விழுப்புரம் 

       15                       N உமாசங்கர் TM விழுப்புரம் 

வட்டி விகிதத்தை குறைத்திடவும் , தனி நபர் SURETY இல்லாமல் கடன் பெற்றிடவும், ஊழலற்ற நிர்வாகத்தை நடத்திடவும் நமது வேட்பாளர்களை ஆதரித்து மேற்கண்ட வரிசை எண்களில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்.