வியாழன், 13 நவம்பர், 2014

பாஜகவின் இரட்டை நாக்கு அரசியல்




இறுதியாக, தில்லி சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் அடுத்த ஆண்டின் துவக்கத் தில் நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுவிட்டன. நவம்பர் 4 அன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் தில்லி சட்டமன்றத்தைக் கலைத்திடக் கோரி தில்லிதுணைநிலை ஆளுநர் அளித்த பரிந்துரையை உடனடியாக ஏற்றுக் கொண்டதை அடுத்துநாட்டின் தலைநகரில் மீண்டும் புதிதாக தேர்தல் நடத்துவதற்கான நடைமுறை தொடங்கிவிட்டது. இதன்மூலம், நவம்பர்25 அன்று காலியாக இருந்த மூன்று இடங்களுக்காக நடைபெறவிருந்த இடைத் தேர்தல்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. (இந்த மூன்று தொகுதிகளிலும் தேர்வு பெற்ற பாஜக உறுப்பினர்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதால் இந்த இடங்கள் காலியாயின.) தில்லி சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி யின் அரசாங்கம், ராஜினாமா செய்துவிட்டதால், அது 2014 பிப்ரவரியிலிருந்து செயல்படா நிலையிலிருந்தது.
சட்டமன்றம் கலைக்கப் பட்டதிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் மீண்டும் புதிதாகத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தேர்தல்கள் நடந்து, புதிய ஆட்சி அமையும்வரை, மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் தற்போதைய குடியரசுத் தலைவர் ஆட்சி தொடரும் என்பது உறுதி. தில்லி சட்டமன்றத்தில் பெரும்பான்மை யைப் பெறுவதற்காக பாஜக மேற்கொண்ட அனைத்துத் தில்லுமுல்லு வேலைகளும் தோல்வியடைந்ததை அடுத்தே, இத்தகைய முடிவிற்கு அக்கட்சி வந்துள்ளது. பாஜக, தில்லி சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக, எல்லாவிதமான குதிரைபேரங் களிலும் ஈடுபட்டதாக, ஏஏபி கட்சியும் முன் னாள் தில்லி முதல்வரான அதன் தலைவரும் குற்றம்சாட்டி இருந்தார்கள்.
மகாராஷ்ட்ராவில் தேர்தல் வெற்றி மற்றும் ஹரியானாவில் தனிப்பெரும் கட்சி அந்தஸ்தைப் பெற்றதைத் தொடர்ந்து, பாஜக பெரும்பான்மையைப் பெற்றிடுவதற்காக இத்தகைய தில்லுமுல்லு வேலைகள் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதுபோல் தோன்றுகிறது. இப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் களில், வெற்றிகளைப் பெற்றிருந்தபோதிலும், 2014 பொதுத் தேர்தல்களுக்குப்பின் நடைபெற்ற பல்வேறு சட்டமன்றங்களில் நடைபெற்ற பல்வேறு இடைத் தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெறவில்லை. உத்தரப்பிரதேசம், குஜ ராத், ராஜஸ்தான் மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கு முன்பு, நாட்டின் பல மாநிலங்களில் 50 சட்டமன்ற இடங்களுக்காக இடைத் தேர்தல்கள் நடந்துள்ளன.
இவற்றில் 2014 பொதுத் தேர்தல்களுக்கு முன் 35 இடங்களில் பாஜக குறிப்பிடத்தக்க அளவில் முன்னணியில் இருந்தது. ஆயினும் பாஜக தலைமையிலான தேஜகூட்டணி இவற்றில் 18 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இம் மாநிலங்களில் இதற்கு முன் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிட்டால்கூட, கூர்மையான அளவிற்கு வீழ்ச்சியே ஏற்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில் 71 இடங்களை பாஜககைப்பற்றி இருந்தது. ஆனால் அதன் பின்னர் அது மத்தியில் ஆட்சிஅமைத்து சுமார்100 நாட்கள் முடிந்துள்ள நிலையில் மீண்டும் இம்மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் சட்டமன்றத்தில் அது பெற்றி ருந்த 8 இடங்களை இழந்து விட்டது. குஜராத்திலும் பாஜக 3 இடங்களை இழந்துள்ளது.
அதேபோன்றே ராஜஸ்தானிலும் 3 இடங்களை இழந்துவிட்டது. இப்போது ஒன்பது மாநிலங் களில் 32 சட்டப்பேரவை இடங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பாஜக வெறும் 12 இடங் களை மட்டுமே வென்றிருக்கிறது. சமீபத்தில் மகாராஷ்ட்ராவிலும், ஹரியானா விலும் நடைபெற்ற தேர்தல் வெற்றிகளில்கூட, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தங்களுடைய மிகவும் அரக்கத்தனமான நிகழ்ச்சி நிரலாக விளங்கும் `இரட்டை நாக்கு’ அரசிய லைப் பிரயோகிப்பதில் தவறவில்லை என்று ஊடகங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. ஒரு பக்கத்தில் `வளர்ச்சி’ என்றும், `குஜராத் மாடல்’ என்றும், `நல்ல நாள் வருகுது’ என்றும் சொல்லிக்கொண்டே, மறுபக்கத்தில் தேர்தல் ஆதாயங்களை அறுவடை செய்வதற்காக மதவெறித் தீயை விசிறி, வன்முறைகளில் ஈடுபடும் தங்கள் உண்மையான உத்தியைக் கடைப்பிடித்ததையும் பார்த்தோம்.
தில்லியில் நடைபெறவிருக்கும் தேர்தலின்போதும் இதேபோன்று தேர்தல் உத்திகளைப் பின்பற்றிட முடிவு செய்திருப்பதை, இடைத்தேர்தல்களில் பாஜக பின்னடைவை சந்தித்த பின்னர் அதன் மூத்த தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களிலிருந்து நன்கு உணர்ந்து கொள்ளமுடிகிறது. `ஜிகாத் காதல்’ போன்ற முழக்கங் களை முன்னெடுத்துச் செல்லாததும், முசாபர்நகர், சகாரன்புர் மற்றும் மொராதாபாத் ஆகியஇடங்களில் நடைபெற்ற வகுப்புக் கலவரங் களை பெரிய அளவிற்குத் தேர்தல் பிரச்சனை யாக எடுத்துப் போகாததும்தான் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜக பல இடங்களை இழந்ததற்கு முக்கிய காரணம் என்று அவர்கள்கூறத் தொடங்கியுள்ளனர்.
“2014 மக்கள வைத் தேர்தல்களின்போது நாம் அதிக வாக்குகளைப் பெற்றதற்கு நம் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலே காரணமாகும். இப்போது இடைத் தேர்தலின்போது தான் நம்முடைய உண்மையான அடையாளத்தை மறந்ததும், உள்ளார்ந்த அரசி யலைப்பின்பற்றியதும்தான் நம் தோல்விக்குக் காரணம்,’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது. (மெயில் டுடே, செப்டம்பர் 17, 2014) மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா வெற்றி களைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ்/பாஜக தங்களுடைய மதவெறித் தீயை தில்லியில் பலபகுதிகளில் விசிறிவிடத் தொடங்கி இருக்கிறது. பவானா, நந்னகிரி, திரிலோக்புரி, சமய்பூர் பத்லி மற்றும் பல இடங்களில் இவ்வாறு அவர்கள் தங்கள் மதவெறி நடவடிக்கை களைத் தொடங்கியுள்ளனர்.
வடக்கு தில்லி யில் பவானா பகுதியில் நவம்பர் 2 அன்று ஒரு`மகா பஞ்சாயத்து’ நடந்திருக்கிறது. அதில் நவம்பர் 4 அன்று நடைபெறவுள்ள முகரம் ஊர்வலத்தை எதிர்த்திட வேண்டும் என்று கோரியுள்ளனர். இக்கூட்டத்தில் அப்பகுதி யைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் மிகவும் வெறித்தனமாகப் பேசியிருக்கிறார். வரவிருக்கும் தேர்தல்களை மனதில்கொண்டுதான் இப்பகுதிகளில் பதற்றநிலைமை உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்ப தாக, அப்பகுதி மக்கள் என்டிடிவி போன்ற ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். இங்கேயுள்ள ஒரு சிறிய வாய்க்கால் இந்து மற்றும் முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளைப் பிரிக்கிறது. மதப்பதற்ற நிலைமையைத் தணிப் பதற்காக, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக முகர்ரம் ஊர்வலம் வரும் பாதையை மாற்றி அமைத்திட முஸ்லிம் சிறுபான்மையினர் ஒப்புக்கொண்ட போதிலும், அங்கே பதற்ற நிலைமைகள் தொடர்கின்றன.
கிழக்கு தில்லியில் உள்ள திரிலோக் புரியிலிருந்து மிக அருகில், வடகிழக்குத் தில்லியில் உள்ள நந்னாகிரிப் பகுதியில், சென்ற வாரம்இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வகுப்பு மோதல்கள் நடைபெற்றுள்ளன. மீண்டும் இங்கே கலகத் தைத் தூண்டி விட்டது பாஜக தலைவர்கள்தான் என்பது ஊடகங்களில் வந்துள்ளசெய்திகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது. தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை சாக் காக வைத்துக்கொண்டு சமய்பூர் பத்லி மற்றும் மஜ்னு கா திலா ஆகியஇடங்களில் வகுப்புவாதப் பதற்ற நிலைமைகள் உருவாக்கப்பட் டிருக்கின்றன. ஐம்பது வயது மூதாட்டி ஒரு வர் இதில் பலியாகிவிட்டார். நாற்பதுக்கும் மேற் பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தேசிய அரசியலில் தொடர்ந்து நீடிக்க வேண்டு மானால் அதற்கு வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதும், மதவெறித் தீயை விசிறி விடுவதும்தான் அடிப் படை என்கிற விதத்தில் பிரதமரே இவற்றை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். மும்பையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இதனை விரிவாகவே ஊடகங்கள் தெரிவித் தன.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் காணப்பட்ட ஓர் உரைக்கு, ஓர் அரசியல் விமர்சகர் கீழ்க்கண்டவாறு கருத்து தெரிவித் திருக்கிறார்: “ஈடிணையற்ற வகையில் புத் தெழுச்சி பெற்ற இந்துயிசத்தின் தாயத்தாக தற்போதைய இந்தியப் பிரதமர் மீளவும் புதி தாய் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார் என்பதை யார் மறுக்க முடியும்?’’ இந்த “ஈடிணையற்ற வகை’’ என்பது பிரதமரே பீற்றிக் கொள்வதைப்போல, இந்தியாவில் ஆண் டாண்டு காலமாய் இருந்து வரும் புராணக் கதைகளையெல்லாம் எவ்வித சிரமமுமின்றி நாட்டின் வரலாறாக மாற்றுவதும், தத்துவ சாஸ்திரத்தை, மத சாஸ்திரத்துடன் இணைப்பதுமேயாகும்.
இத்தகைய இவர்களின் அரக்கத்தனமான நிகழ்ச்சிநிரலை இரக்கமற்ற முறையில் பின்பற்ற இவர்கள் முயற்சிப்பது, இந்தியாவின் நவீன மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்குப் பேரழிவினை ஏற்படுத்திடும். நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை ஆர்எஸ் எஸ் பரிவாரங்கள் தங்களுடைய வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றிட முயலும் இவர்களின் கொள்கையை முழுமையாக நிராகரித்து, மதவெறி சக்திகளுக்கு தோல்வியை ஏற்படுத்து வதன் மூலம் நாட்டுமக்கள் இத்தகைய ஆபத்தை முழுமையாக முறியடித்திட வேண்டும். ஒன்றுபட்ட மதச்சார்பற்ற ஜனநாயக இந்தி யாவின் அடித்தளங்களைப் பாதுகாப்பதன் மூலமாக மட்டுமே நாட்டு மக்கள் அனை வருக்கும் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்கான போராட்டத்தை தீர்மானகரமான முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும்.
- தமிழில்: ச.வீரமணி
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தேசிய அரசியலில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் அதற்கு வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதும், மதவெறித் தீயை விசிறி விடுவதும்தான் அடிப்படை என்கிற விதத்தில் பிரதமரே இவற்றை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். 
நன்றி தீக்கதிர் 13.11.2014

கருத்துகள் இல்லை: