வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

அதானி ஆக்டோபஸ் ......கதறும் கமுதி

இராமநாதபுரம் மாவட்டம் என்றாலே காட்டு கருவேல மரமும், அதிலிருந்து தயாரிக்கப்படும் கரியும் தான் நினைவுக்கு வரும். ஆனால் அதையும் தாண்டி நெல், பருத்தி, மிளகாய், மக்காச்சோளம் என்று விளையும் நல்ல விவசாயமும் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் அடியோடு அழிக்கும் பணி அதிவேகமாக அங்கே துவங்கியிருக்கிறது.

ஆம்!கமுதி வட்டம் செங்கப்படை - தாதகுளம் - இடையங்குளம் கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் விதவிதமான வாகனங்கள் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேற்று மாநிலத்து ஆட்கள் தான் அந்த இயந்திரங்களை இயக்குகிறார்கள். விசாரித்ததில் குஜராத் மாநிலம் என்று தெரிந்தது.சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான பணிகள் தான் விறுவிறுப்பாக நடைபெறுகிறது என்று தெரிவித்தார்கள்.“மதுரை டெம்பிள்சிட்டி, கமுதி சோலார்சிட்டி” என்று அதிமுகவினர் அம்மாவுக்கு நன்றி தெரிவித்து ஏராளமான டிஜிட்டல் தட்டிகளை பல வண்ணங்களில் வைத்துள்ளனர்.

காட்டுக் கருவேல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்படுகின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மைதானமாக காட்சியளிக்கிறது. இத்தனை நாட்களும் அதில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளும், மாடுகளும் திகைத்து திசைதெரியாமல் நிற்கின்றன. இயற்கை உபாதைகளைக் கழிக்க ஆண்களும், பெண்களும் பயன்படுத்திய இடங்கள் இப்போது கம்பி முள் வேலி போட்டு, கேட் போடப்பட்டு பெரும் நிறுவனத்திற்கு சொந்தமாகிவிட்டது. ஒதுங்க இடமின்றி, இப்போது அல்லல்படுகின்றனர் பெண்கள். தாதகுளம் கிராமத்திற்கு சொந்தமான கண்மாயில் பாதிவரை தற்போது கம்பெனியால் வேலி போட்டு மடக்கப்பட்டிருக்கிறது. மெயின் ரோட்டிலிருந்து தாதகுளம் செல்லும் கிராமச்சாலையின் இருபுறமும் இருக்கும் நிலங்களும், சோலார் கம்பெனியால் வாங்கப்பட்டுள்ளது.

 இனி சாலை பொதுச்சாலையாக நீடிக்குமா? ‘அந்நியர்கள் உள்ளே வரக்கூடாது’ அல்லது ‘அனுமதி பெற்று உள்ள வரவும்’ என்று அச்சாலையில் விரைவில் அறிவிப்பு பலகை வைக்கப்படலாம். ஊரை காலி பண்ணி வேற இடத்துக்கு போகப் போறோம் என்று பள்ளி சிறுவர்கள் உட்பட சொல்லிக் கொண்டு திரிகின்றனர்.பிறந்து வாழ்ந்த மண்ணைவிட்டு நிரந்தரமாக இடம் மாறிச் செல்வது எவ்வளவு கொடூரமானது? சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழும் அவலம்! வழிபட்ட கோயிலை, மூதாதையர்களின் கல்லறையை, ஓடியாடி, கூடிக் குழாவிய இடத்தை என எல்லாவற்றையும் இழந்துவிட்டு எங்கே போய் என்ன செய்யப் போகிறார்கள்?நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.
 சூரிய ஓளி மின்சார நிலையம் அமைந்தால் வேலை கிடைக்கும் என்று எவனோ சொன்னானாம்! பொக்லைன் எந்திரத்தால் பிடுங்கப்படும் காட்டு கருவேல மரங்களின் சல்லி வேர்களை வெட்டிவிடும் வேலையை இப்போது பெண்கள் அங்கே செய்து கொண்டிருக்கிறார்கள். கட்டுமானப் பணிகளின் போது ஒரு சிலருக்கு வேலை கிடைக்கலாம். ஏனென்றால் பெரும்பாலும் அதற்கும் இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படும். மின்நிலையம் அமைக்கப்பட்ட பிறகு நிலத்தை இழந்த கிராமத்து விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் அதில் என்ன வேலை தருவார்கள்? வேடிக்கை பார்க்கக் கூட அனுமதிக்க மாட்டார்கள்.

 மோடி அரசு சட்டம் போட்டு விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறிக்க முயற்சிக்கிறது. உள்ளூர் நில புரோக்கர்களோ சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து சாமர்த்தியமாக நிலத்தை அபகரித்துள்ளனர். விபரம் தெரியாத கிராமத்து விவசாயிகளை ஏமாற்றி, “குஜராத்காரன் இங்க வரப்போரானா, அப்படியே வந்தாலும் நம்ம ஊர்க் காரனை மீறி நிலத்துல கால் வைச்சிடுவானா” என்று வெற்றுச் சவடால் பேசியே ஏக்கர் 10 ஆயிரம் ரூபாய் என்று 2008லிருந்து 2010க்குள் பெரும்பாலான நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன.‘நிலம் உங்கள் கைல தான் இருக்கப் போவுது, பவர் மட்டும் கொடுத்தா போதும்‘ என்று, சும்மா வருகிற பணம் தானே என்று பலரும் பவர் எழுதி கொடுத்திருக்கின்றனர். இரண்டு ஏக்கருக்கு பவர் வாங்கிக் கொண்டு அவருக்கு சொந்தமான 10 ஏக்கரும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.பல நூற்றுக்கணக்கான விவசாயிகளின் நிலங்கள் இவ்வாறு மோசடியாக விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.கமுதி வட்டத்திற்குட்பட்ட நிலங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களிலுள்ள பத்திரபதிவு அலுவகங்களில் தான் விற்பனை பத்திரபதிவு நடைபெற்றுள்ளது.

 இதில் பிரதானமான மோசடிப் பேர்வழிகள் வில்வக்கனி, முத்துவழிவிட்டான் ஆகிய இரண்டு நில புரோக்கர்கள் தான். மற்றொருவகை, இடையங்குளம் கிராமத்தில் வசிக்கும் நல்லக்காள் என்பவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை அவர் இறந்துவிட்டதாக இறப்புச் சான்றிதழ் கொடுத்து அவருடைய வாரிசு என்று வேறு சிலரை அழைத்துச் சென்று சிவகாசி பத்திரபதிவு அலுவலகத்தில் நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நல்லக்காள் உயிரோடு இருக்கிறார் என்று தற்போது கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் வழங்கியிருக்கிறார். தான் உயிரோடிருக்கும் சான்றிதழுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் ஆஜராகி புகார் கொடுத்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிலத்தில் இன்றைய தேதி வரை இவர் தான் விவசாயம் செய்து கொண்டுள்ளார். இதே போல், 2013ல் லட்சுமண தேவர் இறந்துவிட்டதாக கூறி அவருக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துவிட்டனர். தற்போது கிராம நிர்வாக அலுவலரிடம் உயிரோடு இருப்பதாக சான்றிதழ் வாங்கி வைத்துள்ளார்.

 இப்படி இன்னும் எத்தனை பேரை உயிரோடு கொன்றிருக்கிறார்களோ - அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவருமே தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்று சான்றிதழ் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது. இல்லையென்றால் உங்கள் இறப்புச் சான்றிதழை உங்களிடமே வழங்கினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.இன்னொரு வகை, ஏக்கர் 10 ஆயிரம் ரூபாய் என்று அடிமாட்டு விலைக்கு ஏமாந்து விற்று விட்டோமே, இதுபோல் கம்பெனி வருமென்று தெரியாமல் போய்விட்டதே, குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்த நிலத்தை அநியாயமாக தாரை வார்த்து விட்டோமே என்று புலம்பும் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள். செங்கப்படை கிராம விவசாயிகளுக்கு சொந்தமான மொத்த நிலம் 1800 ஏக்கர். இதில் 1700 ஏக்கர் விற்பனை செய்யப்பட்டுவிட்டது.

 வீடும் - வாசலும் தான் மிச்சம். கிராம மக்களின் பொதுப் பயன்பாட்டிற்கென்று எந்த நிலமும் இல்லை. இப்படியொரு தாலுகாவுக்குட்பட்ட 25க்கு மேற்பட்ட கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மோசடியாகவும், ஏமாற்றியும், மக்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினரின் ஒத்துழைப்போடு, நில புரோக்கர்கள், உள்ளூர் ரவுடிகள் புடைசூழ இந்த மாபெரும் நிலமோசடியை அரங்கேற்றியுள்ளார்கள். பகல்கொள்ளை என்பார்களே அது பத்திரபதிவு, பட்டா மாறுதலுடன் நடைபெற்றிருக்கிறது. இவையனைத்தும் வெட்ட வெளிச்சமானதற்குப் பிறகும், நிலத்தைப் பறிகொடுத்தவர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த பிறகும் மாவட்ட நிர்வாகம் கற்சிலையை போல் எந்த அசைவுமின்றி இருக்கிறது. இந்த நிலங்கள் அனைத்தும் பல கைகள் மாறி தற்போது சோலார் மின்திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

 தொழில்துவங்க தனியாரோ, அரசோ, முறையாக நிலங்களை பரிவர்த்தனை செய்து, நியாயமான விலையை விவசாயிகளுக்கு கொடுத்து நிலம் வாங்கலாம்.ஆனால் கமுதியில் மொத்தமும் மோசடியாக இருக்கிறது.எனவே மோசடி பத்திரப்பதிவு, போலி பத்திரம், போலியான பட்டா மாறுதல், பொய்யான சான்றிதழ் அரசுக்கு சொந்தமான கண்மாய், வரத்து வாய்க்கால், சாலைகள், மக்களுக்கான நடைபாதைகள், கிராமத்தின் பொது நிலங்கள் என அனைத்தையும் வாரிச்சுருட்டும் ஆக்டோபஸ் விலங்காக அதானி குழுமம் கமுதியில் காலூன்றி உள்ளது.

 இந்த மாபெரும் நிலமோசடி குறித்து பகிரங்க நீதிவிசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். அதுவரை சோலார் மின்திட்டம் தொடர்பான பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். நிலபுரோக்கர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்ய வேண்டும். பத்திரப்பதிவு, வருவாய்த்துறையினர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.உலகுக்கே உணவளிக்கும் உழவர்களின் நிலத்தைப் பறித்து, உண்ணும் சோற்றில் மண் அள்ளிப் போட்ட கயவர்களை எதிர்த்துக் களம் காண்போம்!ஏமாற்றுப் பேர்வழிகளுக்கும், அயோக்கியத்தனத்தில் ஈடுபடும் போக்கிரிகளுக்குத்தான் வாழ உரிமையா? நேர்மையாக உழைத்துண்ணும் உழவர்களுக்கு வாழ வழியில்லையா?நமது மூதாதையர்கள் நமக்கு விட்டுச் சென்ற பரம்பரைச் சொத்தான காணி நிலத்தை மீட்போம்! வாரீர்! ஒன்று திரள்வீர்! முஷ்டி உயர்த்தி போராட! செங்கொடி இயக்கம் உங்களோடு உடனிருந்து போராட தயாராக இருக்கிறது.------கட்டுரையாளர்: பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

கருத்துகள் இல்லை: